Sunday, April 8, 2012

பெண்

மண்ணில் பதிந்த பாதங்களை பற்றியிழுத்து விட்டு
மறுபடி ஓடிவந்து பாதங்களை தழுவி  தவறுக்கு வருந்தி
மன்னிப்பு கேட்கும் குழந்தை மனதுடன் நித்தம் நித்தம்
மருகி கொண்டு வந்து போகும் கடல் அலைகள்...
ஆனால், நீ அந்த கடல் மட்டுமல்ல......
விண்மீன்களின் நடுவே தனக்கென்று ஓர் இடத்தை,
விரும்பி அமைத்துக்கொண்டு கவிஞனுக்கு துணை செய்ய,
பாதியாக, பாதி நாட்கள் வந்து போனாலும் ஒளியில்,
பரிதிக்கு நிகராக பாரினில் உலா வரும்
நிலவு.....
ஆனால், நீ அந்த நிலவு மட்டுமல்ல......
மயக்கும் அந்தி சாயும் பொழுதில், கை விசிறியாக மாறி,
மனதையும் உடலையும் குளிர்வித்து, தானும் குளிர்ந்து
மண்ணுலக மாந்தர்களை மகிழ வைப்பது கடமையென,
மட்டற்ற மகிழ்ச்சியுடன் ஓடிவரும் தென்றல்......
ஆனால், நீ அந்த தென்றல் மட்டுமல்ல.......
வாசமாக பிறந்து, வாசங்களுடன் வளர்ந்து, மனிதரின்
சுவாசத்துடன் கலந்து, பிறப்பெய்தியதே பிறருக்குத்தான் எனும்,
மாபெரும் உண்மையை, மனிதருக்கு பாடமாக்கி இறுதியில்,
மடிவையும் இந்த மண்ணிலேயே சந்தித்து போகும் பூக்கள்.....
ஆனால், நீ அந்த பூக்கள் மட்டுமல்ல........
பச்சை பயிரினங்கள் செழிப்பாக வளர அதற்குதவிட,
பாய்ந்தோடும் நீர் நிலைகள் என்றும் நிறைந்திருக்க,
விண்ணில் பிறந்து மண்ணில் தவழ்ந்து படைத்தவனின்,
விருப்பத்தை நிறைவேற்றும் மழைத் துளிகள்........
ஆனால், நீ அந்த மழை மட்டுமல்ல........
கடலின் கருணையும்.
நிலவின் பரிவும்,
தென்றலின் பொறுமையும்,
பூக்களின் தியாகமும்,
மழையின் பாசமும்,
குடக்௬லி எதுவும் கேட்காமல் உன்னிடம்,,
குடியேறி  விட்டனவே.....
இவையணைத்தும் ஒன்றிணைந்து,
இயல்பாய் தோற்றுவித்த,
இயற்கையின் பொக்கிஷம் நீ.....
இறைவனின் இனிய படைப்பு நீ......
இவ்வுலகில் நீ அன்றும், இன்றும், என்றும்,
இன்றியமையாதவள்.........

1 comment:

  1. இவ்வுலகில் இன்றியமையாதவள் பெண்...

    மாபெரும் உண்மை...

    ReplyDelete