Friday, August 29, 2014

மரியாதைக்குரிய மலையின் மரங்களே….!



 

வானத்தை நோக்கி வளர்ந்தாலும், சிறிதும்
வளையாது, வானத்தின் மேல் வைத்த
விழிகளையும், சற்றும் வாங்காது,
காற்றினையும், நீரினையும் மட்டுமே,
கடும் பசியிலும், உணவாக உட்கொண்டு,
மலையிதுவே எனவும் மலைத்து
மாளாமல், மண்ணின் மடியினிலே
உழலும் மற்ற உறவுதனையும்,
உதறித்தள்ளி, உள்ளமதில் கள்ளமில்லாது,
சுற்றியிருக்கும் சொந்தங்களையே
சுகமான சொர்க்கங்களாய், சுமந்து கொண்டு,     
தன்துணை நாடி வரும் பிற உயிர்களின்
தற்காப்பின் அவசியத்தை, உணரும் தன்மையுடனே,
தன்னலம் கருதாது, வளமையான எண்ணமுடனே,
தளர்வில்லா மனமுடனே, தாய்மையின் உள்ளத்துடனே,
அன்போடு தன் கிளைகளையும், இலைகளையும்
அமர்ந்து கொள்ள, அடைக்கலமாய் தந்தபடி,
குளிரையும், மழையினையும் ஒருபோதும்
குற்றமென்று நினைக்காமல், கொடும்
பனியையும், காற்றினையும், பெரும்பாலும்
பாதகமாய் நினையாமல், தினந்தோறும்
“மானிடர்களின் நலன்கள் சிறப்புற,
மாதவம் செய்யும் முனிவர்களின்
மனநிலையில், மட்டில்லா மகிழ்வோடு,
கால்கடுக்க நின்றபடி, கால நேரம் கணக்கின்றி
களைப்பாற நேரமின்றி கடுந்தவம் செய்யும்
மா”மரங்களே..! யாருக்காக இந்த தவம்..?
மரங்களாகிய உங்களுக்காவா..? இல்லை,,!
மற்றவர்களின் நலனுக்காகவா…? இருப்பினும் இந்த
மகத்தான மாண்பினுக்கு மனமதிலே மகிழ்வோடு,
மட்டில்லா மரியாதையுடன், மண்டியிட்டு வணங்குகிறேன்….!

2 comments:

  1. மரத்துக்கோர் மரியாதை.

    மனிதனைவிட உயர் பிறவியோ ? இந்த மர(ன)ங்கள் என்ற எண்ணத்தை உணர வைத்தது தங்களது கவிதை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!
      தாங்கள் என் பதிவினை படித்து கருத்திட்டமைக்கு, மிக்க மகிழ்ச்சி..! நிச்சயமாக மனிதனை விட மரங்கள் மாண்பு மிகுந்தவைதான். நான் 2012 ல், "அவரும், நானும்" என்றொரு கதை எழுதியுள்ளேன். தங்களுக்கு நேரமிருக்கும் போது அக்கதையை படித்துப் பார்த்து கருத்திடவும். மற்றபடி வாழ்த்துக்களுக்கு என் நன்றிகள்...!
      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete